பணம் படைத்தவன்
பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
(கண் போன)
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
(கண் போன)
பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்
(கண் போன)
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
(கண் போன)